சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்புடனும் இலங்கை குடும்பத்திட்டச் சங்கத்துடனும் இணைந்து இலங்கை மருத்துவச் சங்கமானது 2015 மார்ச் 03ஆம் திகதியன்று கொழும்பு லேடி றிஜ்வே மருத்துவமனையில் குறுந்திரைப்படம் திரையிடலும் கலந்துரையாடலும் எனும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
பால்நிலை மற்றும் பாலியல் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் குறித்த சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்ட இந்நிகழ்வு, அரங்கில் இருந்த பார்வையாளர்கள் மத்தியில் உயிரோட்டமுள்ள கருத்தாடல் ஒன்றுக்கு வழிவகுத்தது. பல வருடங்களாக பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு நடத்தி வருகின்ற குறுந்திரைப்படப் போட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட்டன. அந்தக் குறுந்திரைப்படங்களை உருவாக்குவதற்குப் பின்புலமாக அமைந்த விடயங்களைப் பகிர்ந்துகொள்ளும் பொருட்டு, வெற்றி பெற்ற பல குறுந்திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டனர்.